சேத்துப்பட்டை அடுத்த கொம்மனந்தல் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில், டெங்கு பரவலை தடுத்தல், பொதுமக்களுக்கு ஊராட்சி சார்பில் சுகாதாரமான குடிநீர் விநியோகம் செய்தல் குறித்த விழிப்புணர்வுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட பொதுசுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறை, திருவண்ணாமலை சுகாதார மாவட்டம், சேத்துப்பட்டு ஊரக வளர்ச்சித் துறை ஆகியவை இணைந்து தேவிகாபுரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இந்தக் கூட்டத்தை நடத்தின.
கூட்டத்தில் மாவட்ட சுகாதார துணை இயக்குநர் மீரா கலந்து கொண்டு பேசுகையில், கிராமங்களில் உள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் ஆழ்துளை கிணறுடன்கூடிய குடிநீர் தொட்டிகளை சுத்தம் செய்தல், குடிநீர் செல்லும் குழாயை பராமரித்தல், குடிநீரில் குளோரினேஷன் செய்து பொதுமக்களுக்கு குடிநீர் வழங்குதல், குழாய் அருகே தேவையில்லாமல் நீர் தேங்குவதை தடுத்தல், கிராமப்புறங்களை தூய்மையாக வைத்திருத்தல் குறித்து பேசினார்.
கொம்மனந்தல் வட்டார மருத்துவர் ராஜேஷ்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மோகன், பாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும், இந்தக் கூட்டத்தில் சேத்துப்பட்டு ஒன்றியத்தில் உள்ள 49 ஊராட்சிகளைச் சேர்ந்த ஊராட்சிச் செயலர்கள், மேல்நிலை குடிநீர் தொட்டி இயக்குபவர்கள், சுயஉதவிக் குழுவைச் சேர்ந்த மகளிர், தன்னார்வலர்கள், செவிலியர்கள் கலந்து கொண்டனர்.