திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த ஜூலை 31-ஆம் தேதி வரை நேர்காணலுக்கு வராத ஓய்வூதியர்களுக்கு ஆகஸ்ட் மாதம் முதல் ஓய்வூதியம் நிறுத்தப்படுவதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
திருவண்ணாமலை மாவட்ட கருவூல அலகில் மாவட்டக் கருவூலம், சார் - கருவூலங்கள் மூலம் ஓய்வூதியம் பெறும் தமிழக அரசு ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்கள், ஆசிரியர்களுக்கு கடந்த ஏப்ரல் 1 முதல் ஜூன் 30-ஆம் தேதி வரை 2017-ஆம் ஆண்டுக்கான நேர்காணல் நடைபெற்றது.
இந்த நேர்காணலுக்கு 98 சதவீத ஓய்வூதியர்கள் மட்டுமே வந்திருந்தனர். நேர்காணலுக்கு வராத 2 சதவீத ஓய்வூதியர்களுக்கு நேர்காணலில் பங்கேற்குமாறு செல்லிடப்பேசி குறுந்தகவல் மூலமும், பதிவுத் தபால் மூலமும் தகவல் அனுப்பியும் அவர்கள் நேர்காணலில் பங்கேற்கவில்லை. எனவே, 2017 ஜூலை 31-ஆம் தேதி வரை நேர்காணலுக்கு வராத ஓய்வூதியர்களின் ஓய்வூதியம் ஆகஸ்ட் மாதம் முதல் நிறுத்தம் செய்யப்படுவதாக மாவட்ட ஆட்சியர் மு.வடநேரே தெரிவித்தார்.