திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நிலவும் குடிநீர்த் தட்டுப்பாட்டைப் போக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென நகர பாஜக கோரிக்கை விடுத்துள்ளது.
திருவண்ணாமலையில் நகர பாஜக செயற்குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடந்தது. கூட்டத்துக்கு நகரத் தலைவர் பி.கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார். நகரச் செயலர் நரசிம்மன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் வினோபாரதி, நகர இளைஞரணிச் செயலர் வீரமுரளி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர துணைத் தலைவர் பட்டறை முருகேசன் வரவேற்றார். நகர பொதுச் செயலர் கே.ஆறுமுகம் தீர்மானம் வாசித்தார். மாவட்டத் தலைவர் எஸ்.நேரு, மாவட்ட துணைத் தலைவர் எம்.எஸ்.சுந்தரமூர்த்தி, மாவட்டப் பொருளாளர் என்.ராமச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தின்போது, பருவ மழை தொடங்கியிருப்பதால், திருவண்ணாமலை நகராட்சி நிர்வாகம் அனைத்துக் கால்வாய்களையும் தூர்வாரி சுத்தம் செய்ய வேண்டும். டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும். நகரில் உள்ள சாலைகளை சீரமைப்பதோடு, தரமான சாலைகள் அமைக்க வேண்டும். ஈசான்ய சுடுகாட்டில் அமைந்துள்ள குப்பைக் கிடங்கில் குப்பை எரிவதன் மூலம் அந்தப் பகுதி மக்களுக்கு சுகாதாரச் சீர்கேடு ஏற்படுவதால், குப்பையை எரிப்பதை தவிர்க்க வேண்டும்.
அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக அசுத்தமே வெளியேறு, ஊழலே வெளியேறு, தீவிரவாதமே வெளியேறு, சாதி பிரிவினைவாதிகளே வெளியேறு, மதவாதமே வெளியேறு என்று பாஜவினர் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.