திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தோர் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க வரும் 15-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி தெரிவித்தார்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் 2018 ஜனவரி 1-ஆம் தேதியை தகுதி ஏற்படுத்தும் நாளாகக் கொண்டு வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணி நடைபெறுகிறது. அதன்படி, வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்வதற்கான விண்ணப்பங்கள் 2017 அக்டோபர் 3-ஆம் தேதி தொடங்கி நவம்பர் 30-ஆம் தேதி வரை பெறப்பட்டது.
இந்தக் காலக்கெடுவை தற்போது டிசம்பர் 15-ஆம் தேதி வரை தேர்தல் ஆணையம் நீட்டித்துள்ளது.
அதன்படி, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க படிவம் 6, இறந்த நபர்கள், நிரந்தரமாக வெளியூர் சென்ற நபர்களின் பெயர்களை நீக்க படிவம் 7, வாக்காளர்களின் விவரங்களை திருத்தம் செய்ய படிவம் 8 உள்ளிட்ட ஆவணங்களை பொதுமக்கள் அளித்துப் பயன்பெறலாம்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் தற்போது வீடு, வீடாக வாக்காளர் பட்டியல் சரிபார்க்க வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வருகின்றனர். இவர்களிடமோ, வட்டாட்சியர் அலுவலகங்கள், நகராட்சி அலுவலகங்களிலோ மனுதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.
வீடு தேடி வரும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு பொதுமக்கள் உரிய ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இதுதவிர, http://www.nvsp.in/ என்ற இணையதளத்திலும் விண்ணப்பிக்கலாம்.
இறுதி வாக்காளர் பட்டியல் 2018 ஜனவரி 10-ஆம் தேதி வெளியிடப்படும்.
திருவண்ணாமலை மாவட்ட பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி தெரிவித்துள்ளார்.