திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயிலில் ஆடிப்பூர பிரம்மோத்ஸவம் திங்கள்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
சிவனின் அக்னி ஸ்தலமான திருவண்ணாமலையில் ஆண்டுதோறும் ஆடிப்பூர பிரம்மோத்ஸவம் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. அதன்படி, இந்த ஆண்டுக்கான பிரம்மோத்ஸவம் திங்கள்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
இதையொட்டி, அதிகாலை 3.30 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு ஸ்ரீஅருணாசலேஸ்வரர், ஸ்ரீஉண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெறுகின்றன. பின்னர், ஸ்ரீஉண்ணாமுலையம்மன் சன்னதி எதிரே உற்சவர் சுவாமிகள் எழுந்தருளுகின்றனர்.
காலை 6.01 மணி முதல் 7.30 மணிக்குள் ஸ்ரீஉண்ணாமுலையம்மன் சன்னதி எதிரே உள்ள தங்கக் கொடிமரத்தில் ஆடிப்பூர பிரம்மோத்ஸவத்துக்கான கொடியேற்றம் நடைபெறுகிறது. இதையடுத்து, சுவாமி வீதியுலா கோலாகலமாக நடைபெறுகிறது.
தொடர் நிகழ்ச்சிகள்: தொடர்ந்து வரும் 25-ஆம் தேதி வரை தினமும் காலை, இரவு வேளைகளில் அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் ஸ்ரீவிநாயகர், ஸ்ரீபராசக்தியம்மன் அலங்கார ரூபங்களில் மாட வீதியுலா வருகின்றனர்.
வரும் 26-ஆம் தேதி காலை கோயிலில் உள்ள சிவகங்கை தீர்த்தக் குளத்தில் ஸ்ரீபராசக்தியம்மன் தீர்த்தவாரி நடைபெறுகிறது. அன்றைய தினம் மாலை அம்மனுக்கு வளைகாப்பு உத்ஸவமும், இரவு காமதேனு வாகனத்தில் சுவாமி வீதியுலாவும், நள்ளிரவில் அம்மன் சன்னதி எதிரே தீமிதி விழாவும் நடைபெறுகின்றன. ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் ஜெகந்நாதன் மற்றும் கோயில் ஊழியர்கள், உபயதாரர்கள் செய்து வருகின்றனர்.