திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் ஆடிப்பூர பிரம்மோற்சவம் திங்கள்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
சிவனின் அக்னி ஸ்தலமான திருவண்ணாமலையில் ஆண்டுதோறும் ஆடிப்பூர பிரம்மோற்சவம் கோலாகலமாக நடைபெற்று வருகிறது.
இந்த ஆண்டுக்கான பிரம்மோற்சவம் திங்கள்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதையொட்டி, அதிகாலை 3.30 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு ஸ்ரீஅருணாசலேஸ்வரர், ஸ்ரீஉண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.
கொடியேற்றம் கோலாகலம்: பின்னர், ஸ்ரீஉண்ணாமுலையம்மன் சன்னதி எதிரே உற்சவர்
ஸ்ரீபராசக்தியம்மன் எழுந்தருளினார். காலை 7 மணிக்கு ஸ்ரீஉண்ணாமுலையம்மன் சன்னதி எதிரே புதிதாக செய்து நிறுவப்பட்ட தங்கக் கொடிமரத்தில் ஆடிப்பூர பிரம்மோற்சவத்துக்கான கொடியேற்றம் நடைபெற்றது.
வேத மந்திரங்கள் முழங்க கோயில் சிவாச்சாரியார்கள் ஆடிப்பூர பிரம்மோற்சவத்துக்கான கொடியேற்றினர்.
நிகழ்ச்சியில் கோயில் இணை ஆணையர் ஜெகந்நாதன், கோயில் ஊழியர்கள், பக்தர்கள், உபயதாரர்கள் பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சிகள்: வருகிற 25-ஆம் தேதி வரை தினமும் காலை, இரவு வேளைகளில் அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் ஸ்ரீவிநாயகர், ஸ்ரீபராசக்தியம்மன் மாட வீதியுலா நடைபெறும். வருகிற 26-ஆம் தேதி காலை கோயிலில் உள்ள சிவகங்கை தீர்த்தக் குளத்தில் ஸ்ரீபராசக்தியம்மன் தீர்த்தவாரி நடைபெறுகிறது.
அன்றைய தினம் மாலை வளைகாப்பு மண்டபத்தில் அம்மனுக்கு வளைகாப்பு உத்ஸவமும், இரவு காமதேனு வாகனத்தில் சுவாமி வீதியுலாவும், நள்ளிரவில் அம்மன் சன்னதி எதிரே தீமிதி விழாவும் நடைபெறுகின்றன.