வந்ததவாசி அருகே கூலித் தொழிலாளி சாவில் சந்தேகம் இருப்பதாக அளிக்கப்பட்ட புகாரின்பேரில் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
வந்தவாசியை அடுத்த ஆயிலவாடி புதிய காலனியைச் சேர்ந்தவர் டில்லிபாபு (47). இவரது மனைவி நிர்மலா (41). இவர்களுக்கு 3 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். டில்லிபாபு சரிவர வேலைக்கு செல்லாமல் இருந்து வந்தாராம். மேலும், தினமும் மது அருந்திவிட்டு வீட்டுக்கு வருவாராம். இதனால் கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்படுமாம்.
இதேபோல, கடந்த சனிக்கிழமை இரவு டில்லிபாபு மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்தாராம். இதனால் அவருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் இடையே பலத்த தகராறு ஏற்பட்டதாம். இதன்பின்னர் படுத்துத் தூங்கிய டில்லிபாபு ஞாயிற்றுக்கிழமை காலை இறந்து கிடந்துள்ளார். இதையடுத்து, டில்லிபாபுவின் சாவில் சந்தேகம் இருப்பதாக அவரது அக்காவின் கணவர் பெருமாள், வடவணக்கம்பாடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸார், டில்லிபாபுவின் சடலத்தைக் கைப்பற்றி உடல்கூறு ஆய்வுக்காக வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.