ஆரணி பழைய பேருந்து நிலையத்தில் பேருந்தில் அமர்ந்திருந்த பெண்ணிடம் தங்கச் சங்கிலியை பறித்துவிட்டு தப்பியோட முயன்றவரை பயணிகள் பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர்.
ஆரணி பழைய பேருந்து நிலையத்தில் இருந்து வளையாத்தூர் செல்லும் அரசுப் பேருந்தில் அந்த ஊரைச் சேர்ந்த சாந்தா (57) என்பவர் அமர்ந்திருந்தார். அப்போது, பின் இருக்கையில் அமர்ந்திருந்த நபர் சாந்தா அணிந்திருந்த தங்கச் சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பியோட முயன்றார்.
அப்போது, சாந்தா கூச்சலிட்டதால், பேருந்திலிருந்தவர்கள் அந்த நபரை மடக்கிப் பிடித்து ஆரணி நகர காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
பின்னர், போலீஸார் நடத்திய விசாரணையில், அவர் சேத்துப்பட்டைச் சேர்ந்த பெருமாள் மகன் திருநாவுக்கரசு (45) என்பது தெரியவந்தது. இதையடுத்து, அவரிடமிருந்த தங்கச் சங்கிலியை போலீஸார் மீட்டுக்கொடுத்ததுடன், அவரை கைது செய்தனர்.