திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து 483 மனுக்கள் பெறப்பட்டன.
கூட்டத்துக்கு தலைமை வகித்த ஆட்சியர் மு.வடநேரே, பொதுமக்கள், மாற்றுத் திறனாளிகள், முதியோர்களிடம் இருந்து முதியோர் உதவித் தொகை, வங்கிக்கடன், திருமண உதவித்தொகை, இலவச வீட்டுமனைப் பட்டா, சாதிச்சான்று, வேலைவாய்ப்பு, விதவை உதவித்தொகை, மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித்தொகை, மாற்றுத் திறனாளிகளுக்கான உதவி உபகரணங்கள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 483 மனுக்களை பெற்றார்.
இந்த மனுக்கள் மீதும், ஏற்கெனவே பெறப்பட்ட மனுக்கள் மீதும் விரைவான நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் மு.வடநேரே உத்தரவிட்டார். நிலுவையில் உள்ள மனுக்கள் மீது தொடர் நடவடிக்கை எடுக்குமாறும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.
கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் பொ.ரத்தினசாமி மற்றும் வருவாய்த் துறை, வேளாண் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.