போளூரை அடுத்த படைவீடு ரேணுகாம்பாள் அம்மன் கோயில் ஆடி வெள்ளி விழா குறித்த 2-ஆம்கட்ட ஒருங்கிணைப்புக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு வருவாய் கோட்டாட்சியர் உமாமகேஸ்வரி தலைமை வகித்தார். இதில், சிறப்பு அழைப்பாளராக கலசப்பாக்கம் எம்எல்ஏ வி.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு பேசியதாவது:
ஆடி வெள்ளி விழாவுக்காக படைவீடு ரேணுகாம்மாள் அம்மன் கோயிலுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இவர்களுக்கு குடிநீர், மின்சாரம், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை அலுவலர்கள் செய்து தர ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். மேலும், இரு சக்கர வாகனங்களுக்கு சுங்கவரி வசூல் செய்யக் கூடாது என்றார். கூட்டத்தில் வட்டாட்சியர் புவனேஸ்வரி, முன்னாள் எம்எல்ஏ நளினிமனோகரன், கோயில் செயல் அலுவலர் பெரியமருதுபாண்டியன், கூட்டமைப்புத் தலைவர் மனோகரன், விஜயகுமாரி சசிகுமார் மற்றும் அரசு அலுவலர்கள், கோயில் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.