வந்தவாசி அருகே குடிநீர் சரிவர விநியோகிக்கப்படாததைக் கண்டித்து, பொதுமக்கள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தெள்ளாறு ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்டது ஆச்சமங்கலம் கிராமம். இந்த ஊராட்சியில் உள்ள சித்தேரியில் அமைக்கப்பட்டுள்ள 2 கிணறுகள் மூலம் கிராமத்துக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், ஒரு கிணற்றில் குடிநீர் ஆதாரம் குறைந்ததால், கடந்த சில மாதங்களாகக் குடிநீர் சரிவர வழங்கப்படவில்லையாம். இதுகுறித்து பலமுறை புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் கிராம மக்கள் குடிநீர் வழங்காததைக் கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் தெள்ளாறு - வெடால் சாலையில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தகவலறிந்து அங்கு வந்த தெள்ளாறு ஊராட்சி ஒன்றியப் பொறியாளர் செல்வராஜ் உள்ளிட்ட அலுவலர்கள் உரிய நடவடிக்கை எடுப்பதாகச் சமரசம் செய்ததையடுத்து கிராம மக்கள் சாலை மறியலை கைவிட்டனர்.
மேலும், பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு வருவதாகக் கூறி, ஆச்சமங்கலம் ஊராட்சி செயலரை பணியிடை நீக்கம் செய்ய வலியுறுத்தி, கிராம மக்கள் கையெழுத்திட்ட கோரிக்கை மனுவை ஒன்றியப் பொறியாளர் செல்வராஜிடம் அளித்தனர்.