திருவண்ணாமலை நகராட்சி துப்புரவுத் தொழிலாளர்கள் தங்களது ஊதியத்தை உயர்த்தித் தரக் கோரி, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்துக்கு அனைத்துத் துப்புரவுத் தொழிலாளர்கள் நலச் சங்கத் தலைவர் க.பழனி தலைமை வகித்தார். செயலர் எஸ்.செல்வகருப்பன் முன்னிலை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கடந்த 13 ஆண்டுகளாக தனியார் நிர்வாகத்திடம் போடப்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்து, துப்புரவு பணி முழுவதையும் திருவண்ணாமலை நகராட்சி நிர்வாகம் ஏற்று நடத்த வேண்டும். துப்புரவுத் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் தினக்கூலி ரூ. 167-ஐ ரூ. 600-ஆக உயர்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.
இதனைத் தொடர்ந்து, துப்புரவுத் தொழிலாளர்கள் அனைவரும் மாவட்ட ஆட்சியர் மு.வடநேரேவை சந்தித்து தங்களது கோரிக்கைகளை மனுவை அளித்தனர். மனுவைப் பெற்றுக் கொண்ட ஆட்சியர் மு.வடநேரே உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.