பொறியியல் கல்லூரி மாணவர்களின் புதிய கண்டுபிடிப்புகள்
புதிதாக 20 இயந்திரங்களைக் கண்டுபிடித்த திருவண்ணாமலை அருணை பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு, அந்தக் கல்லூரியின் துணைத் தலைவர் எ.வ.குமரன் பாராட்டுத் தெரிவித்தார்.
திருவண்ணாமலை அருணை பொறியியல் கல்லூரி இயந்திரவியல் துறை மாணவர்கள் புதிதாக 20 இயந்திரங்களைக் கண்டுபிடித்துள்ளனர். குறிப்பாக, சூரிய சக்தியில் இயங்கும் ஆட்டோ, காஸ் மூலம் இயங்கும் பைக், சாலைகளில் குப்பைகளை அகற்றித் தூய்மை செய்யும் இயந்திரம், தானியங்கி உழவு இயந்திரம், கரும்பு வெட்டும் இயந்திரம், அறுவடை இயந்திரம், மணிலா விதைக்கும் இயந்திரம் உள்ளிட்ட இயந்திரங்களைக் கண்டுபிடித்துள்ளனர்.
இந்த இயந்திரங்களின் செயல்விளக்கம் கல்லூரி வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. இதில், சூரிய சக்தியில் இயங்கும் ஆட்டோ அனைவரையும் வெகுவாகக் கவர்ந்தது. புகை, இரைச்சல், எரிபொருள் செலவில்லாத வகையில் இந்த ஆட்டோ வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆட்டோ பேட்டரியை ஒரு முறை சார்ஜ் செய்தால், 220 கி.மீ. தொலைவு வரை செல்லலாம். இது சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது.
புதிய இயந்திரங்களைக் கண்டுபிடித்த மாணவர்களை கல்லூரி துணைத் தலைவர் எ.வ.குமரன், பதிவாளர் சத்தியசீலன், செயலர் எம்.புர்க்கிந்த்ராஜ், கல்லூரி முதல்வர் மோகன்
குமார், ஆலோசகர் ராமநாதன், இயந்திரவியல் துறைத் தலைவர் அ.ஏகாம்பரம் மற்றும் துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள் பாராட்டினர்.