திருவண்ணாமலையில் சனிக்கிழமை அரசு, நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு நடைபெறுகிறது.
மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் நகராட்சி உயர்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்களுக்கான பொது மாறுதல், பதவி உயர்வு, பணி நிரவல் கலந்தாய்வு வெள்ளிக்கிழமை தொடங்கியது. வரும் 31-ஆம் தேதி வரை இந்தக் கலந்தாய்வு நடைபெறுகிறது.
முதல் நாளான வெள்ளிக்கிழமை அரசு மற்றும் நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கான மாவட்டத்துக்குள் இட மாறுதல், மாவட்டம் விட்டு மாவட்டம் இட மாறுதல் பெறுவதற்கான கலந்தாய்வு நடைபெற்றது.
கலந்தாய்வில் இன்று: 2-ஆவது நாளான சனிக்கிழமை மேல்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு நடைபெறுகிறது. வரும் 22-ஆம் தேதி உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கான மாவட்டத்துக்குள் இட மாறுதல் கலந்தாய்வும், மாவட்டம் விட்டு மாவட்டம் இட மாறுதவற்கான கலந்தாய்வும் நடைபெறுகிறது.
எனவே, கலந்தாய்வுக்கு விண்ணப்பித்துள்ள அனைவரும் அவரவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நாளில், உரிய நேரத்தில் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்று மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வெ.ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.