அனக்காவூர், செங்கம் வட்டார அளவிலான அறிவியல் கண்காட்சி புதன்கிழமை நடைபெற்றது. இதில், அரசுப் பள்ளி மாணவர்கள் தங்களது அறிவியல் தொடர்பான படைப்புகளை பார்வைக்கு வைத்திருந்தனர்.
மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வெ.ஜெயக்குமார் அறிவுரையின்படி அனக்காவூர் வட்டார வள மையத்துக்கு உள்பட்ட தொடக்க, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு தேசிய புத்தாக்க புனைவுத் திட்டம் சார்பில், குறுவள மைய அளவிலான அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.
இதில், செங்காடு மேல்நிலைப் பள்ளி, கூழமந்தல் உயர்நிலைப் பள்ளி, தேத்துறை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி உள்ளிட்ட 101 பள்ளிகளில் இருந்து மாணவர்கள் பங்கேற்றனர். செங்காடு குறுவள மையத்தில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சியை மாவட்டக் கல்வி அலுவலர் ராஜசேகர் தொடக்கி வைத்து பள்ளி மாணவர்கள் உருவாக்கிய அறிவியல் படைப்புகளை பார்வையிட்டார்.
அனக்காவூர் குறுவள மையத்தில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சியை வட்டார வளமைய மேற்பார்வையாளர் (பொ) இரா.சக்திவேல் தலைமையில், கூடுதல் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் டி.ரங்கராஜன் தொடக்கிவைத்தார்.
அறிவியல் கண்காட்சியில் பங்கேற்ற மாணவர்களின் படைப்புகளில் இருந்து சிறந்த படைப்புகளை அனக்காவூர் முதுகலை ஆசிரியர் இராஜசேகர், ஆசிரியை ரேவதி ஆகியோர் தேர்வு செய்தனர். இந்தக் கண்காட்சியில் தொடக்க நிலையில் முதல் பரிசை அனக்காவூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியும், இரண்டாவது பரிசை அனப்பத்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியும், மூன்றாம் பரிசை வடஆளப்பிறந்தான் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியும், ஒட்டுமொத்த படைப்புகளுக்கான பரிசை அத்திக்குளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியும் பெற்றன.
உயர் தொடக்க நிலையில் முதல் பரிசை எருமைவெட்டி பள்ளியும், இரண்டாம் பரிசை அனப்பத்தூர் பள்ளியும், மூன்றாம் பரிசை செய்யாற்றைவென்றான் பள்ளியும், ஒட்டுமொத்த படைப்புகளுக்கான பரிசை புரிசை மேல்நிலைப் பள்ளியும் பெற்றன.
அறிவியல் படைப்புகளில் தேர்வு செய்யப்பட்ட பள்ளி மாணவர்களுக்கு பரிசுத்தொகை வழங்கி பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.
செங்கம்: செங்கம் ஒன்றிய அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், வட்டார அளவிலான அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. சென்னசமுத்திரம் தொகுப்பு கருத்தாய்வு மையத்தில் நடைபெற்ற இந்தக் கண்காட்சியை ஆசிரியர் பயிற்றுநர் ராமன் தொடக்கிவைத்து பார்வையிட்டார்.
கண்காட்சியில் 11 பள்ளியை சேர்ந்த மாணவர்கள், அறிவியல் சார்ந்த படைப்புகளை காட்சிக்கு வைத்திருந்தனர். செங்கம் அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் அறிவியல் பட்டதாரி ஆசிரியை இந்துமதி நடுவராக கலந்துகொண்டு, தூய்மை இந்தியா திட்டம் குறித்த சிறந்த படைப்பினை பார்வைக்கு வைத்திருந்த சென்னசமுத்திரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் ஷாஷான், பூபாலன் ஆகியோரை முதல், இரண்டாம் இடத்துக்கு தேர்வு செய்தார். இவர்களுக்கு கல்வித் துறை சார்பில் பரிசு, சான்று வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியர்கள் சேட்டு, ஜெயவேல், சௌந்தரராஜன், ஆசிரியர்கள் புஷ்பலதா, மகேஸ்வரன், முத்து உள்பட ஆசிரியர்கள், மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.