வந்தவாசி அருகே முன்னால் சென்ற லாரியின் பின் பக்கத்தில் பைக் மோதியதில் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் உயிரிழந்தார்.
வந்தவாசியை அடுத்த விழுதுப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் குப்புசாமி (40). முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவரான இவர், திமுக வந்தவாசி கிழக்கு ஒன்றிய துணைச் செயலராக இருந்து வந்தார்.
குப்புசாமி திங்கள்கிழமை இரவு வந்தவாசியிலிருந்து வீட்டுக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தார். வந்தவாசி - மேல்மருவத்தூர் சாலை, சென்னாவரம் அருகே சென்றபோது இவருக்கு முன்னால் சென்று கொண்டிருந்த லாரி திடீரென நிறுத்தப்பட்டது.
இதனால் குப்புசாமி சென்ற பைக் நிலைதடுமாறி லாரியின் பின் பக்கம் மோதியது. இதில், பலத்த காயமடைந்த குப்புசாமி, வந்தவாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பின்னர், தீவிர சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் உயிரிழந்தார். இதுகுறித்து அவரது உறவினர் வேலு அளித்த புகாரின்பேரில் வந்தவாசி தெற்கு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.