போளூரில் செவ்வாய்க்கிழமை தனியார் பள்ளிப் பேருந்து மோதியதில் பெண் உயிரிழந்தார்.
போளூரை அடுத்த வசூர் ஊராட்சியில் தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் பயிலும் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த சுமார் 40}க்கும் மேற்பட்ட மாணவர்களை ஏற்றிக்கொண்டு பள்ளிப் பேருந்து போளூர் நகருக்குள் சென்றது. பேருந்தை போளூரை அடுத்த சனிக்கவாடி கிராமத்தைச் சேர்ந்த கண்ணாயிரம் மகன் பழனி (39) ஓட்டிச் சென்றார்.
போளூரில் திருவண்ணாமலை } வேலூர் சாலையில் பேருந்து சென்றபோது, எதிரே வந்த இரு சக்கர வாகனத்தில் மோதாமல் இருப்பதற்காக பேருந்தை ஓட்டுநர் இடதுபுறமாக திருப்பினாராம். அப்போது, வீட்டின் எதிரே நின்றிருந்த காந்தா (50) என்பவர் மீது பேருந்து மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த போளூர் போலீஸார் காந்தாவின் சடலத்தை மீட்டு, உடல்கூறு ஆய்வுக்காக போளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிவு செய்ததுடன், பேருந்து ஓட்டுநரான பழனியை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.