வந்தவாசியை அடுத்த வெண்குன்றம் தவளகிரீஸ்வரர் மலைக் கோயிலில் வரும் டிசம்பர் 2-ஆம் தேதி கார்த்திகை தீபத் திருவிழா நடைபெறவுள்ள நிலையில், இது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் வட்டாட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு வந்தவாசி வட்டாட்சியர் ஆர்.முரளிதரன் தலைமை வகித்தார். சமூக பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியர் ஜெ.சேகர், டிஎஸ்பி பொற்செழியன், இந்து சமய அறநிலையத் துறை ஆய்வாளர் தமிழரசி, செயல் அலுவலர் உமேஷ்குமார், நெடுஞ்சாலைத் துறை, மின்சாரத் துறை, சுகாதாரத் துறை உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
கூட்டத்தில், வெண்குன்றம் மலை அடிவாரத்துக்குச் செல்லும் சாலைகளை சீரமைப்பது, தீபத் திருவிழா அன்று மலை அடிவாரத்துக்கு கூடுதல் பேருந்துகளை இயக்குவது, மருத்துவ வசதி, தெரு விளக்கு மற்றும் குடிநீர் வசதி செய்து தருவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.