மத்திய அரசின் ஊழலைக் கண்டித்து, சேத்துப்பட்டில் காங்கிரஸ் கட்சியினர் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் மூத்த தலைவர் குமரிஆனந்தன் கலந்து கொண்டார்.
மத்திய அரசின் ஊழலைக் கண்டித்தும், பாஜக தேசிய தலைவர் அமித்ஷா, அவரது மகன் ஜெய்ஷா ஆகியோர் மீது எழுந்துள்ள ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து நடவடிக்கை எடுக்கக் கோரியும், பிரதமர் மோடி பதவி விலகக் கோரியும் சேத்துப்பட்டு காமராஜர் சிலை அருகில் காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவர் அண்ணாமலை தலைமை வகித்தார். துணைத் தலைவர் யு.அருணகிரி, நிர்வாகி செய்யாறு தில்லை ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில பொதுக்குழு உறுப்பினர் கலீம் வரவேற்றார்.
இதில் சிறப்பு விருந்தினராக மூத்த தலைவர் குமரிஅனந்தன் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் தேசிய ஊடகத் துறை தொடர்பாளரும், முன்னாள் எம்எல்ஏவும் விஷ்ணுபிரசாத், முன்னாள் எம்எல்ஏ ராஜாபாபு, மாவட்ட மகளிர் பிரிவுத் தலைவர் வனமயில், நிர்வாகிகள் நந்தகுமார், அசோக்குமார், சிவாஜிமுருகன், ஜாபர்அலி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.