திருவண்ணாமலை மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களுக்கு நிவாரணம் வழங்கக் கோரி, திருவண்ணாமலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை கோட்டாட்சியர் அலுவலகம் எதிரே ஒருங்கிணைந்த மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்துக்கு திருவண்ணாமலை தெற்கு மாவட்டச் செயலர் பி.கா.அம்பேத்வளவன் தலைமை வகித்தார். வடக்கு மாவட்டச் செயலர் கு.செல்வம், கிழக்கு மாவட்டச் செயலர் பாஸ்கர், நாடாளுமன்றத் தொகுதிச் செயலர் இ.நேரு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாநில மகளிரணி துணைச் செயலர் வளர்மதி, மாவட்டப் பொருளாளர் துரைபாண்டியன், எழுச்சிப் பாசறை மாவட்டச் செயலர் ராஜீவ் காந்தி ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.
தொடர்ந்து, டெங்கு காய்ச்சலால் இறந்தவர்களுக்கு தமிழக அரசு உரிய நிவாரணம் வழங்கக் கோரியும், டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த தவறிய தமிழக அரசைக் கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
இதில், திருவண்ணாமலை நகரச் செயலர் தேவேந்திரன், நகரப் பொருளாளர் கே.பாலு, ஒன்றியச் செயலர் ரவி உள்பட 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.