திருவண்ணாமலை நகராட்சி மகளிர் மேல்நிலைப் பள்ளி, மத்திய பேருந்து நிலையப் பகுதிகளில் வியாழக்கிழமை நடைபெற்ற டெங்கு கொசு ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சிகளில் மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி கலந்து கொண்டார்.
திருவண்ணாமலை நகராட்சி மத்திய பேருந்து நிலையத்தில் உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறை, திருவண்ணாமலை நகராட்சி நிர்வாகம் சார்பில் டெங்கு கொசு ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு நகராட்சி ஆணையர் பாரிஜாதம் தலைமை வகித்தார்.
சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் மீரா, கோட்டாட்சியர் உமா மகேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு டெங்கு கொசு ஒழிப்பு உறுதிமொழியை வாசித்தார்.
இதைத் தொடர்ந்து, அதிகாரிகள், பொதுமக்கள், உணவக சங்க நிர்வாகிகள் உறுதிமொழி ஏற்றனர். தொடர்ந்து, பொதுமக்கள், பயணிகளுக்கு நிலவேம்புக் குடிநீர் வழங்கப்பட்டது.
பொதுமக்களிடையே டெங்கு கொசு ஒழிப்பு விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டன.
நகராட்சி மகளிர் பள்ளியில்...: இதேபோல, திருவண்ணாமலை நகராட்சி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் டெங்கு கொசு ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
பள்ளி மாணவிகள் பலர் கலந்து கொண்டு டெங்கு கொசுவை ஒழிக்க உறுதிமொழி ஏற்றனர். இதில், பள்ளி ஆசிரியர்கள், மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.