திருவண்ணாமலையை அடுத்த ஆனந்தல் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில், ஆர்ப்பாக்கம் அரசு உயர்நிலைப் பள்ளியில் டெங்கு காய்ச்சலைப் பரப்பும் ஏடிஸ் கொசு ஒழிப்பு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு வட்டார மருத்துவ அலுவலர் எஸ்.பி.ராஜா தலைமை வகித்தார். மருத்துவ அலுவலர் ஸ்ரீகிருஷ்ணா டெங்கு காய்ச்சல் எவ்வாறு பரவுகிறது, அதைத் தடுப்பது எப்படி என்பது குறித்து பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விளக்கினார்.
தொடர்ந்து, பள்ளி மாணவ, மாணவிகள் 248 பேருக்கு நிலவேம்புக் குடிநீர் வழங்கப்பட்டது. மேலும், பள்ளி வளாகத்தில் டெங்கு கொசுப்புழு ஒழிப்புப் பணி நடைபெற்றது.
நிகழ்ச்சியில் பள்ளித் தலைமை ஆசிரியர் விஜயகுமார், சுகாதார மேற்பார்வையாளர் அ.பாஸ்கர், கே.ஆனந்தன், ஆய்வாளர் என்.முருகன், கிராம சுகாதார செவிலியர் சுசீலா ஜெக்குலின் உள்பட பலர் கலந்து கொண்டனர்.