ஆரணி, செய்யாறு பகுதிகளில் பட்டாசுகளை பாதுகாப்பாக வெடிப்பது குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடத்தப்பட்டது.
தீபாவளி பண்டிகையையொட்டி, பட்டாசுகளை பாதுகாப்பாக வெடிப்பது குறித்து ஆரணியில் தீயணைப்புத் துறை சார்பில் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.
ஊர்வலத்தை ஆரணி காவல் துணைக் கண்காணிப்பாளர் ஜெரினாபேகம் தொடக்கி வைத்தார்.
இதில், தீயணைப்புத் துறை நிலைய அலுவலர் பேச்சிக்காளை, காவல் ஆய்வாளர் சாலமன்ராஜா, உதவி ஆய்வாளர் சங்கர், ஆரணி லயன்ஸ் சங்கத் தலைவர் சுரேந்திரன், நெல் அரிசி வியாபாரிகள் சங்க மாநில நிர்வாகி பி.நடராஜன், ஆரணி சுப்பிரமணிய சாஸ்திரியார் மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியை மகேஸ்வரி மற்றும் ஆரணி பகுதி வியாபாரிகள் கலந்து கொண்டனர்.
மேலும், ஊர்வலத்தில் கலந்து கொண்ட சுப்பிரமணிய சாஸ்திரியார் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள், பட்டாசுகளை பாதுகாப்பாக வெடிப்பது குறித்து துண்டுப் பிரசுரங்களை வழங்கியும், முழக்கங்களை எழுப்பியும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திச் சென்றனர்.
செய்யாறு: இதேபோல, தீபாவளி பண்டிகையின்போது பட்டாசுகளை பாதுகாப்பாக வெடிப்பது குறித்து செய்யாறு ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்கள் முன்னிலையில் தீயணைப்புத் துறையினர் செயல் விளக்கம் செய்து காண்பித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.