செய்யாறில் மரணமடைந்த 100 வயது முதியவரின் கண்கள் ரிவர்சிட்டி லயன்ஸ் சங்கம் சார்பில் சனிக்கிழமை தானமாகப் பெறப்பட்டன.
செய்யாறு லோகநாதன் தெருவைச் சேர்ந்தவர் நெசவுத் தொழிலாளி குணசேகரன். இவரது தந்தை கே.கதிர்வேல் (100). இவர், கடந்த சில நாள்களாக உடல் நலம் சரியில்லாமல் இருந்த நிலையில், வெள்ளிக்கிழமை இரவு வீட்டில் மரணமடைந்தார்.
இதையடுத்து, குணசேகரன் மற்றும் அவரது குடும்பத்தினரின் ஒப்புதலின்பேரில், காஞ்சிபுரம் அகர்வால் கண் மருத்துவமனை மருத்துவக் குழுவினர் விரைந்து வந்து கதிர்வேலின் கண்களை தானமாகப் பெற்றுச் சென்றனர்.
இதற்கான ஏற்பாடுகளை செய்யாறு ரிவர்சிட்டி லயன்ஸ் சங்கத் தலைவர் பி.எல்.ரவி, மாவட்டத் தலைவர் பி.நடராஜன் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.