திருவண்ணாமலை மாவட்டம், வேட்டவலம் ஸ்ரீசம்பந்த விநாயகர் கோயிலில் 63-ஆவது ஆண்டு லட்ச தீபத் திருவிழா சனிக்கிழமை கோலாகலமாக நடைபெற்றது.
இதையொட்டி, முற்பகல் 11 மணிக்கு மூலவர் விநாயகருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை, மகா தீபாராதனைகள் நடைபெற்றன. மாலை 4 மணிக்கு சிறப்பு நாகஸ்வர கச்சேரியும், மாலை 6 மணிக்கு கோயில் அறங்காவலர்கள் ப.முருகையன், ரகுபதி ஆகியோர் முன்னிலையில் வேட்டவலம் ஜமீன்தார் சம்பத், லலித் ஆகியோர் குத்து விளக்கேற்றி லட்ச தீப திருவிழாவைத் தொடக்கி வைத்தனர். தொடர்ந்து, ஏராளமான பக்தர்கள் திரண்டு லட்ச தீபம் ஏற்றினர். மாலை 7 மணிக்கு தீபம் சேவா சங்கம், அனைத்து போக்குவரத்து ஊழியர்கள்
சங்கம், மூர்த்தி மெட்ரிக் பள்ளி உள்பட பல்வேறு அமைப்பினர் தனித்தனியே அன்னதானம் வழங்கினர்.
இரவு 8 மணிக்கு இன்னிசை நிகழ்ச்சியும், இரவு 10 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட பூப்பல்லக்கில் ஸ்ரீசம்பந்த விநாயகர், வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீமுருகப்பெருமான், ஸ்ரீரேணுகாம்பாள் சுவாமிகள் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
தொடர்ந்து வாணவேடிக்கை, கரகாட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழாவில், கோயில் குருக்கள் ராஜேஷ், கார்த்தி, சுப்பிரமணி மற்றும் விழாக் குழுவினர், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.