தண்டராம்பட்டு அருகே நெல் அறுவடை இயந்திரமும், லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 4 பேர் பலத்த காயமடைந்தனர்.
சேலம் மாவட்டம், ஆத்தூர் கிராமத்தில் இருந்து ஆந்திர மாநிலத்துக்கு நெல் அறுவடை இயந்திரம் சென்றுகொண்டிருந்தது. இந்த இயந்திரத்தை ஆத்தூரைச் சேர்ந்த குமரேசன் (30) ஓட்டிச் சென்றார்.
ஞாயிற்றுக்கிழமை அதிகாலை திருவண்ணாமலையை அடுத்த வரகூர் அருகே சென்றபோது, எதிரே வந்த லாரி, நெல் அறுவடை இயந்திரம் மீது நேருக்கு நேர் மோதியது.
இந்த விபத்தில், லாரியில் வந்த விழுப்புரம் மாவட்டம், அகரம் கோட்டாளம் கிராமத்தைச் சேர்ந்த முருகேசன் (49), சரத்குமார் (19), அத்திக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் (25), பச்சையம்மாள் (35) ஆகியோர் பலத்த காயமடைந்தனர்.
இவர்களை பொதுமக்கள் மீட்டு, திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து வானாபுரம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.