வந்தவாசியில் ரூ.3 ஆயிரத்துக்காக இரு சக்கர வாகன வியாபாரியை அடித்துக் கொலை செய்த ஆட்டோ ஓட்டுநரை போலீஸார் கைது செய்தனர்.
வந்தவாசி கோட்டைத் தெருவைச் சேர்ந்தவர் சலீம் (35). பழைய இரு சக்கர வாகனங்களை வாங்கி விற்கும் தொழில் செய்து வந்தார். வந்தவாசி தீயணைப்பு நிலையம் பின்புறம் உள்ள பகுதியில் வசிப்பவர் சேகர் மகன் ஆட்டோ ஓட்டுநர் நரேஷ் (29). இவர், சலீமிடமிருந்து ரூ.3 ஆயிரத்தை கடனாகப் பெற்றிருந்தாராம். இந்தப் பணத்தை சலீம் அடிக்கடி கேட்டு வந்தாராம். இதனால் இருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்தது.
இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு வந்தவாசி அம்பேத்கர் சிலை அருகே உள்ள ஆட்டோ நிறுத்தத்தில் நரேஷ் ஆட்டோவில் அமர்ந்திருந்தாராம். அப்போது, சலீம் அங்கு சென்று தனக்குச் சேர வேண்டிய ரூ.3 ஆயிரத்தை கேட்டதால், இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த நரேஷ், ஆட்டோவில் இருந்த இரும்புக் கம்பியால் சலீமின் தலையில் தாக்கினாராம்.
பலத்த காயமடைந்த சலீமை பொதுமக்கள் மீட்டு, வந்தவாசி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர், தீவிரச் சிகிச்சைக்காக சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். எனினும், அங்கு சலீம் புதன்கிழமை இறந்தார்.
இறந்த சலீமுக்கு மனைவி, 3 குழந்தைகள் உள்ளனர். இதுகுறித்து வந்தவாசி தெற்கு போலீஸார் வழக்குப் பதிந்து நரேஷை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட நரேஷ், வந்தவாசி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.