சேத்துப்பட்டை அடுத்த மொடையூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத் தேர்தலில் திமுக நிர்வாகிகள் வெற்றி பெற்றதையொட்டி, சனிக்கிழமை அந்தக் கட்சியினர் வெற்றி ஊர்வலம் சென்றனர்.
மொடையூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் மொடையூர், மட்டபிறையூர், மாணிக்கவல்லி, அரும்பலூர், ஓடநகரம், ஓட்டேரி ஆகிய கிராமங்களைச் சேர்ந்தோர் அங்கத்தினர்களாக உள்ளனர். இந்த கூட்டுறவுச் சங்க இயக்குநர்களுக்கான தேர்தலில் திமுக, அதிமுக, பாமக உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த 36 பேர் போட்டியிட்டனர்.
வியாழக்கிழமை தேர்தல் நடைபெற்ற நிலையில், வாக்கு எண்ணிக்கை தேர்தல் அலுவலர் ரவி, செயலர் வேலுமணி முன்னிலையில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில், திமுக நிர்வாகிகளான சேட்டு, கலைவாணி, ராதிகா, சுமதி, அண்ணாதுரை, குணசுந்தரி, முருகன், ஆனந்தன், குப்பன், லோகநாதன், உமாபதி ஆகிய 11 பேரும் இயக்குநர்களாக வெற்றி பெற்றனர்.
தொடர்ந்து, திமுகவினர் வெற்றி ஊர்வலம் சென்றனர். இதில், ஒன்றியச் செயலர் பி.மனோகரன், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் அம்பிகாகுப்புசாமி, திமுக நிர்வாகிகள் அண்ணாதுரை, முருகன், கார்த்திகேயன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.