திருவண்ணாமலை மாவட்ட அளவில் 2017 - 2018ஆம் ஆண்டுக்கான சிறந்த பள்ளிக்கான விருது பெரணமல்லூரை அடுத்த கடப்பந்தல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது.
இந்தப் பள்ளியில் நடைபெற்ற இதற்கான விழாவுக்கு உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் கோ.குணசேகரன் தலைமை வகித்தார். பள்ளித் தலைமை ஆசிரியர் சி.ஆறுமுகம், வட்டார வள மைய மேற்பார்வையாளர் சுப்பிரமணி, பெற்றேர் ஆசிரியர் கழகத் தலைவர் சுப்பிரமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் ச.அண்ணாமலை வரவேற்றார். நிகழ்ச்சியின்போது, கடப்பந்தல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு சிறந்த பள்ளிக்கான விருதை உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் கோ.குணசேகரன் வழங்கினார். இதனை பள்ளித் தலைமை ஆசிரியர்
சி.ஆறுமுகம் மற்றும் ஊர் முக்கியப் பிரமுகர்கள் பெற்றுக் கொண்டனர். இதில், உதவி ஆசிரியர்கள் இந்திராணி, பாண்டுரங்கன், பழனி, மதியழகன், கல்விக் குழு உறுப்பினர்கள் கிருஷ்ணன், முபாரக், குப்பன், வையாபுரி, பச்சையம்மாள் மற்றும் ஊர் முக்கியப் பிரமுகர்கள், மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.