திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த மாற்றுத் திறனாளிகள் இலவச பல்லூடக, புகைப்படப் பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கை, கால் பாதிக்கப்பட்ட (40 சதவீதம் முதல் 60 சதவீதம் வரை) மாற்றுத் திறனாளிகள் மற்றும் செவித்திறன் குறைபாடுடைய மாற்றுத் திறனாளிகளுக்கு சென்னையில் இந்தப் பயிற்சி அளிக்கப்படும்.
பயிற்சியின்போது, விடுதி வசதி தேவைப்படும் மாற்றுத் திறனாளிக்கு விடுதி வசதியுடன் கூடிய பயிற்சிக்கான உதவித்தொகை ரூ.1,000 வழங்கப்படும். பயிற்சி பெற விரும்புவோர் 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராகவும், 18 முதல் 40 வயதுக்கு உள்பட்டவராகவும் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்க விரும்புவோர் மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை நகல், குடும்ப அட்டை நகல், கல்வி தகுதிச் சான்று, 2 பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள், தொலைபேசி எண் ஆகியவற்றை இணைத்து மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், திருவண்ணாமலை 606604 என்ற முகவரிக்கு விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி தெரிவித்துள்ளார்.