புதுப்பாளையம் ஒன்றியம், காஞ்சி கிராமப் பகுதியில் ரூ.40 லட்சத்தில் விரைவில் சமுதாயக்கூடம் அமைக்கப்படும் என எம்எல்ஏ பன்னீர்செல்வம் கூறினார்.
புதுப்பாளையம் ஒன்றியம், காஞ்சி கிராமத்தில் தமிழக அரசின் மனுநீதி நாள் முகாம் புதன்கிழமை நடைபெற்றது. முகாமுக்கு திருவண்ணாமலை கோட்டாட்சியர் உமாமகேஸ்வரி தலைமை வகித்தார்.
முன்னாள் மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் நைனாக்கண்ணு, கூட்டுறவு சங்கத் தலைவர்கள் துரை, புருசோத்தமன், பொதுக்குழு உறுப்பினர் பொய்யாமொழி ஆகியோர் முன்னிலை வகித்தனர். செங்கம் வட்டாட்சியர் உதயகுமார் வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக கலசப்பாக்கம் தொகுதி எம்எல்ஏ பன்னீர்செல்வம் கலந்து கொண்டு, 158 பயனாளிகளுக்கு முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டுமனைப் பட்டா, பட்டா மாறுதல், புதிய குடும்ப அட்டை உள்ளிட்ட அரசு நலத் திட்ட உதவிகளை வழங்கினார்.
பின்னர், அவர் பேசியதாவது: காஞ்சி கிராம மக்களின் கோரிக்கையை ஏற்று காஞ்சி பகுதியில் சட்டப் பேரவை உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.40 லட்சம் செலவில் விரைவில் சமுதாயக்கூடம் அமைக்கப்பட உள்ளது.
மேலும், காஞ்சி பகுதியில் செல்லும் செய்யாற்றின் குறுக்கே பாலம் அமைக்க முதல்வரிடம் ஒப்புதல் பெறப்பட்டு, விரைவில் பாலம் கட்டுவதற்கான பணிகள் நடைபெறும்.
கார்ப்பட்டு பகுதியில் ஒரு கி.மீ. தொலைவுக்கு தார்ச்சாலையுடன் ரூ. ஒரு கோடி செலவில் மேம்பாலம் கட்ட நிதி ஒதுக்கப்பட்டு பணிகள்
தொடங்கப்பட உள்ளதாக எனறார் அவர்.
முகாமில் சமூகப் பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியர் ரேணுகா, வட்டார வளர்ச்சி அலுவலர் ஆனந்தன், கிராம நிர்வாக அலுவலர்கள் அப்பர்சாமி, முருகன், முரளி, திருமலை, முகுந்தன் உள்பட வருவாய்த் துறையினர், கிராம மக்கள் பலர் கலந்து கொண்டனர்.