திருவண்ணாமலையை அடுத்த சோமாசிபாடி சிவன் கோயிலில் மகா சிவராத்திரியையொட்டி, ஆன்மிகச் சொற்பொழிவு புதன்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு விழாக் குழுத் தலைவரும், மருத்துவருமான குப்புசாமி தலைமை வகித்தார். செயலர் அய்யப்பன், கார்த்திகேயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒருங்கிணைப்பாளர் ராஜாராம் வரவேற்றார். திருவண்ணாமலை திருக்குறள் தொண்டு மையப் பாவலர் ப.குப்பன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு சம்பந்தர் என்ற தலைப்பில் ஆன்மிகச் சொற்பொழிவாற்றினார். இவரைத் தொடர்ந்து, மாணிக்கவாசகர் என்ற தலைப்பில் கோவிந்தராஜன், சுந்தரர் என்ற தலைப்பில் சமயநெறி ஆசிரியர் சீனுவாச வரதன், அப்பர் என்ற தலைப்பில் திருமூர்த்தி ஆகியோர் ஆன்மிகச் சொற்பொழிவாற்றினர். நிகழ்ச்சியில், ஏராளமான பொதுமக்கள், பக்தர்கள் கலந்து கொண்டனர்.