அனக்காவூர் வட்டார வள மையத்தில் மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கான பாடத் திட்டம் குறித்து பட்டதாரி ஆசிரியர்களுக்கு செவ்வாய்க்கிழமை தொடங்கி வியாழக்கிழமை வரை 3 நாள்கள் பயிற்சி அளிக்கப்பட்டது.
மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வெ.ஜெயக்குமார் வழிகாட்டுதலின் பேரில், அனக்காவூர் வட்டார வள மையத்துக்கு உள்பட்ட பள்ளிகளில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு இந்தப் பயிற்சி அளிக்கப்பட்டது.
பயிற்சிக்கு தலைமை வகித்து தொடக்கி வைத்த வட்டார வள மைய மேற்பார்வையாளர் (பொ) இரா.சக்திவேல், பள்ளியில் படிக்கும் மாற்றுத் திறனாளி குழந்தைகள் அனைவருக்கும் பயிற்சியில் கூறப்படும் கருத்துக்களை அவர்களுக்கு பயன்படும் வகையில் விளக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
பார்வை குறைபாடு குறித்து செய்யாறு அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி கௌரவ விரிவுரையாளர் சி.பிரதீப், யோகா குறித்து பல்லி உயர்நிலைப் பள்ளி ஆசிரியர் குமார், பேச்சு குறைபாடு குறித்து திருவண்ணாமலை மாவட்ட பேச்சு பயிற்சியாளர் ராஜலட்சுமி ஆகியோர் பயிற்சி அளித்தனர்.
மேலும், சிறப்பாசிரியர்கள் பி.சீனுவாசன், ரா.ரமேஷ், அ.அனிஷா, பி.அனுஷா, தசைப் பயிற்சியாளர் தி.ரகுபதி ஆகியோரும் பயிற்சி அளித்தனர்.
இந்தப் பயிற்சியில் அனக்காவூர் வட்டாரத்தைச் சேர்ந்த நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை பள்ளி ஆசிரியர், ஆசிரியைகள் கலந்து கொண்டனர்.