திருவண்ணாமலை மாவட்ட அரசு அலுவலகங்களில் வெள்ளிக்கிழமை பொங்கல் விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.
திருவண்ணாமலை, வேங்கிக்கால் பகுதியில் உள்ள துணை மின் நிலையத்தில் நடைபெற்ற விழாவுக்கு மின்வாரிய மேற்பார்வைப் பொறியாளர் அ.நாகராஜன் தலைமை வகித்தார். செயற்பொறியாளர் பி.ராமு, உதவி செயற்பொறியாளர்கள் எம்.ராஜேந்திரன் (திருவண்ணாமலை), ராஜமாணிக்கம் (தண்டராம்பட்டு) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பொங்கல் வைத்து சூரியபகவானுக்கு படைக்கப்பட்டது. விழாவில், இளநிலைப் பொறியாளர்கள் கே.சம்பத், சீனிவாசன், ஏழுமலை, சிரில், வாசு உள்பட மின்வாரிய அதிகாரிகள், அலுவலர்கள், ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர். ஊழியர்கள் அனைவருக்கும் மேற்பார்வைப் பொறியாளர் அ.நாகராஜன் பொங்கல் வழங்கினார்.
இந்தியன் வங்கி மண்டல அலுவலகம்: திருவண்ணாமலை, அறிவொளிப் பூங்காவில் உள்ள இந்தியன் வங்கியின் மண்டல அலுவலகத்தில் நடைபெற்ற விழாவுக்கு மண்டல மேலாளர் ஆர்.கஜேந்திரன் தலைமை வகித்தார். துணை மண்டல மேலாளர் வி.திருவேங்கடம், முதன்மை மேலாளர் எம்.பிரேமா, முதுநிலை மேலாளர் ஆர்.மகேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
புதுப்பானையில் பெண் ஊழியர்கள் பொங்கல் வைத்தனர். பின்னர், பொங்கல் சூரியனுக்கு படைக்கப்பட்டது. விழாவில், முன்னோடி வங்கி அலுவலர் பி.கே.கோவிந்தராஜன், வர்த்தக அலுவலர் ஆர்.சுனந்தன் மற்றும் வங்கி அதிகாரிகள், ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல, செய்யாறை அடுத்த நாட்டேரி ஆரம்ப சுகாதார நிலையம் உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள அரசு அலுவலகங்களில் பொங்கல் விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.