திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அருகே வெள்ளிக்கிழமை இரவு காரும், லாரியும் மோதிய விபத்தில் தம்பதி உள்பட 5 பேர் உயிரிழந்தனர்.
விபத்து நிகழ்ந்த இடத்தில் திருவண்ணாமலை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பொன்னி சனிக்கிழமை விசாரணை மேற்கொண்டார்.
வந்தவாசி-காஞ்சிபுரம் சாலை விளாங்காடு கூட்டுச் சாலை அருகே வெள்ளிக்கிழமை நள்ளிரவு சாலையோரம் இரு சக்கர வாகனத்துடன் நின்ற தென்னாங்கூரைச் சேர்ந்த முருகன் (45) மீது மோதிய கார், பின்னர் லாரி மீது மோதி விபத்துக்கு உள்ளானது.
இதில் பொங்கல் பண்டிகைக்காக சென்னையிலிருந்து சொந்த ஊரான வந்தவாசியை அடுத்துள்ள கூத்தம்பட்டு கிராமத்துக்கு காரில் சென்ற சென்னையை அடுத்துள்ள நன்மங்கலத்தைச் சேர்ந்த இரு சக்கர வாகன மெக்கானிக் வேலு (45), அவரது மனைவி செல்வி (43), இவர்களது மகளான கல்லூரி மாணவி பிரியங்கா (19), உறவினரான செல்போன் பழுதுபார்க்கும் கடை உரிமையாளர் சந்தோஷ்குமார் (23), இவரது நண்பரான பொறியியல் மாணவர் லத்தீஷ்குமார் (21) ஆகிய 5 பேரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே இறந்தனர்.
மேலும், இரு சக்கர வாகனத்துடன் நின்றிருந்த முருகன் காயமடைந்து வந்தவாசி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
தகவலறிந்த வந்தவாசி டிஎஸ்பி பொற்செழியன், செய்யாறு டிஎஸ்பி குணசேகரன் மற்றும் வந்தவாசி வடக்கு போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று 5 பேரின் சடலங்களையும் மீட்டு வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
திருவண்ணாமலை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பொன்னி சம்பவ இடத்துக்கு சனிக்கிழமை நேரில் சென்று விசாரணை மேற்கொண்டார்.
இதுகுறித்து வேலுவின் மற்றொரு மகன் பிரசன்னகுமார் அளித்த புகாரின் பேரில், போலீஸார் வழக்குப் பதிந்தனர்.
இதுதொடர்பாக லாரி ஓட்டுநரான திண்டிவனத்தை அடுத்துள்ள கீழ்மாவலங்கையை சேர்ந்த பெருமாளை (43) சனிக்கிழமை கைது செய்தனர்.