திருவண்ணாமலையில் இருந்து சவூதி அரேபியாவுக்கு வேலைக்குச் சென்ற தனது தாயை மீட்டுத் தர வேண்டும் என்று இளைஞர் ஒருவர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.
தண்டராம்பட்டை அடுத்த க.உண்ணாமலைபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன் (22). இவர், திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமியிடம் திங்கள்கிழமை அளித்த மனுவில் கூறியுள்ளதாவது:
எனது தாயார் குமாரி கடந்தாண்டு ஆகஸ்ட் 10-ஆம் தேதி திருவண்ணாமலையை அடுத்த இளையாங்கன்னி கிராமத்தைச் சேர்ந்த ஜான் என்பவர் மூலம் சவூதி அரேபியாவுக்கு வேலைக்குச் சென்றார்.
சவூதியில் மாதச் சம்பளமாக ரூ.25 ஆயிரம் தருவதாக ஜான் கூறினார். அதன்படி சவூதிக்குச் சென்ற பிறகு எனது தாய் என்னிடம் தொலைபேசியில் பேசி வந்தார். இந்த நிலையில், கடந்த 2 மாதங்களாக அவர் என்னிடம் பேசவில்லை. இதையடுத்து, கடந்த 10-ஆம் தேதி ஜானிடம் சென்று கேட்டபோது, எனது தாய் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறினார்.
இந்தத் தகவல் உண்மையா என என்னால் உறுதிப்படுத்த முடியவில்லை.
எனவே, என் தாய் உயிருடன் உள்ளாரா அல்லது தற்கொலை செய்துகொண்டாரா என்பதை மாவட்ட நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும். உயிருடன் இருந்தால், அவரை மீட்டுத் தர வேண்டும்.
இறந்திருந்தால் உடலை எடுத்து வர உதவி செய்ய வேண்டும். மேலும், என் அம்மாவின் இறப்புக்குக் காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.
மனுவைப் பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.