திருவண்ணாமலையில் மரப்பட்டறையில் திங்கள்கிழமை நள்ளிரவில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.4 லட்சம் மதிப்பிலான இயந்திரங்கள், மரங்கள் எரிந்து சேதமடைந்தன.
திருவண்ணாமலை - வேலூர் சாலை, அண்ணா நுழைவு வாயில் அருகே ஒரு மரப்பட்டறை உள்ளது. இந்தப் பட்டறையில் திங்கள்கிழமை நள்ளிரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதுகுறித்து திருவண்ணாமலை தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து ஒரு மணி நேரத்துக்கும் மேலாகப் போராடி தீயை அணைத்தனர். இருப்பினும், ரூ.4 லட்சம் மதிப்பிலான மரம் இழைக்கும் இயந்திரம், மரச்சாமான்கள், ஏராளமான மரங்கள் எரிந்து சேதமடைந்தன.
இதுகுறித்து திருவண்ணாமலை தாலுகா போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.