செய்யாறு பகுதியில் தொடர்ந்து வழிப்பறியில் ஈடுபட்டு வந்த இருவர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.
திருவள்ளூர் மாவட்டம், வேப்பம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் கோபி (32), செய்யாறு வட்டம், மேல்மட்டை விண்ணமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் திருமால் (21). இவர்கள் இருவரும் செய்யாறு, தூசி, மோரணம் ஆகிய பகுதிகளில் தொடர் வழிப்பறியில் ஈடுபட்டு வந்ததுடன், வீடுகளில் பூட்டை உடைத்து திருடியும் வந்ததாக செய்யாறு போலீஸாரால் கைது செய்யப்பட்டு, வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த நிலையில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பொன்னி பரிந்துரையின்பேரில், இவர்கள் இருவரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி சனிக்கிழமை உத்தரவிட்டார்.
இதையடுத்து, வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள கோபி, திருமாள் ஆகியோரிடம் குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டதற்கான நகல் வழங்கப்பட்டது.