ஜவ்வாதுமலை கோடை விழா: ஆட்சியர் ஆலோசனை

திருவண்ணாமலை மாவட்டம், ஜவ்வாதுமலையில் நடைபெறும் 21-ஆவது கோடை விழாவுக்கு செய்ய வேண்டிய முன்னேற்பாடு பணிகள்

திருவண்ணாமலை மாவட்டம், ஜவ்வாதுமலையில் நடைபெறும் 21-ஆவது கோடை விழாவுக்கு செய்ய வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி தலைமை வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் பொ.ரத்தினசாமி, ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் க.லோகநாயகி, ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) ஜானகி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பா.முத்தமிழ்ச்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி பேசியதாவது: கோடை விழாவுக்கு வரும் பொதுமக்களுக்கு போக்குவரத்து வசதி, மருத்துவ வசதி, குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் ஏற்படுத்தப்படும்.
விழாவில் காவல் துறை மோப்ப நாய்களின் சாகச நிகழ்ச்சியை சிறப்பாக ஏற்பாடு செய்ய வேண்டும். வேளாண் துறை, தோட்டக்கலைத் துறை சார்பில் மலர் கண்காட்சி, விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள், மலைவாழ் மக்களின் பாரம்பரிய நடனங்கள் நடத்தப்படும்.
இதேபோல, பல்வேறு அரசுத் துறைகள் சார்பில் கண்காட்சி அரங்குகள் அமைக்கப்படும். இந்த அரங்குகளில் அந்தந்த துறைகள் சார்பில் செயல்படுத்தப்படும் பல்வேறு நலத் திட்டங்கள் குறித்து பொதுமக்கள், மலைவாழ் மக்களுக்கு விளக்கப்படும்.
கோடை விழா நடைபெறும் 2 நாள்களும் அனைத்து அரங்குகளும் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை பொதுமக்கள் பார்வைக்கு திறந்திருக்கும் என்றார்.
கூட்டத்தில், மாவட்டப் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் எஸ்.பானு, கலால் உதவி ஆணையர் தண்டாயுதபாணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com