தாக்குதலில் காயமடைந்த முதியவர் சாவு: 6 பேர் கைது

திருவண்ணாமலை அருகே 6 பேர் கொண்ட கும்பலால் தாக்கப்பட்டு பலத்த காயமடைந்த முதியவர் உயிரிழந்தார்.

திருவண்ணாமலை அருகே 6 பேர் கொண்ட கும்பலால் தாக்கப்பட்டு பலத்த காயமடைந்த முதியவர் உயிரிழந்தார். இதையடுத்து, 6 பேரையும் போலீஸார் கைது செய்தனர்.
திருவண்ணாமலை காந்தி நகர் 4-ஆவது தெருவைச் சேர்ந்த பெயின்டர் சுரேஷ் (30). இவரது மனைவி தாமரைச்செல்வி (26). சுரேஷின் தந்தை ஆறுமுகம் (50). தாமரைச்செல்வி, ஆறுமுகம் ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை நிலத்தில் இருந்து வீட்டுக்கு வந்துகொண்டிருந்தனர்.
அப்போது, 6 பேர் கொண்ட கும்பல் தாமரைச்செல்வியை கிண்டல் செய்ததாம். இதுகுறித்து கணவர் சுரேஷிடம் தாமரைச்செல்வி கூறியுள்ளார். உடனடியாக கிண்டல் செய்த 6 பேரையும் சுரேஷ் தட்டிக்கேட்டாராம். இதில் ஆத்திரமடைந்த 6 பேரும் சேர்ந்து சுரேஷை தாக்கினராம்.
தடுக்க முயன்ற ஆறுமுகமும் தாக்கப்பட்டார். இதனால், பலத்த காயமடைந்த ஆறுமுகம், சுரேஷ் ஆகியோர் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். பின்னர், தீவிரச் சிகிச்சைக்காக ஆறுமுகம் சென்னை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். எனினும், அங்கு அவர் செவ்வாய்க்கிழமை இறந்தார்.
இதையடுத்து, ஏற்கெனவே பதியப்பட்டிருந்த அடிதடி வழக்கை கொலை வழக்காக திருவண்ணாமலை கிழக்கு காவல் நிலைய போலீஸார் மாற்றம் செய்தனர். இந்த வழக்கில் திருவண்ணாமலை கீழ்நாத்தூர் நாவரசு (20), திருவண்ணாமலை செல்லநேரி தெரு வினோத்குமார் (20), வேடியப்பன் கோயில் தெரு பார்த்திபன் (30), சந்திரகுமார் (20), தேவனந்தல் கிராமம் அருண்குமார் (20), இதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் உள்பட 6 பேரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com