அகழியுடன் கூடிய தரைத்தள கற்கோட்டையை தன்னகத்தே சிறப்பாகக் கொண்ட வேலூர் மாநகரம், மத்திய அரசின் பொலிவு பெறும் நகரப் பட்டியலில் (ஸ்மார்ட் சிட்டி) இடம்பெற்றுள்ளது.
மாநிலத் தலைநகரங்கள், சுற்றுலாத்தலம், தொன்மையான நகரங்களில் பொலிவுறு நகரங்கள் மிஷன் (smart cities mission) திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு முடிவு செய்து அதற்கான நகரங்களைத் தேர்வு செய்யும் பணியை மத்திய நகர்ப்புற வளர்ச்சித் துறையிடம் ஒப்படைத்தது.
இத்திட்டத்தில் தொன்மையான கோட்டை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளை மேம்படுத்துவது (Area spaced development), ஒருங்கிணைந்த நகர மேம்பாட்டுத் திட்டம் (PAN city development) என இரு பிரிவுகளில் ரூ.1,445 கோடிக்கு திட்டங்கள் தயாரிக்கப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
முதல்கட்டமாக கடந்த 2015 ஆகஸ்டு மாதத்தில் அறிவிக்கப்பட்ட 100 நகரங்கள் பட்டியல் சென்னை, கோவை மட்டும் தேர்வு செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, தற்போது அறிவிக்கப்பட்டுள்ள பொலிவுறு நகரங்கள் மிஷன் திட்ட இரண்டாவது பட்டியலில் தொன்மையான கோட்டையை மையமாகக் கொண்ட வேலூர் மாநகரம், மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோயில், தஞ்சை பெரிய கோயில் ஆகியவை இடம் பெற்றுள்ளன.
இத்திட்டத்தில், ரூ.1,000 கோடி மதிப்பில் வேலூர் கோட்டை மற்றும் சுற்றியுள்ள 11 வார்டுகளில் 1,600 ஏக்கர் பரப்பளவில் இத்திட்டம் மேம்படுத்தப்படவுள்ளது. அதன்படி கோட்டையை பாரம்பரிய சுற்றுலாவாக மேம்படுத்துவது, வை-பை வசதி உள்ளிட்டவை நிறைவேற்றித் தரப்படவுள்ளது.
மற்றொரு பிரிவான ஒருங்கிணைந்த நகர மேம்பாட்டுத் திட்டத்தில் போக்குவரத்து, திடக்கழிவு மேலாண்மை, பொழுதுபோக்கு பூங்காக்கள் என ரூ.445 கோடியில் நிறைவேற்றப்படவுள்ளன.
இதுகுறித்து வேலூர் மாநகராட்சிப் பொறியாளர் பாலசுப்பிரமணியன் கூறியதாவது: பொலிவுறு நகரங்கள் மிஷன் திட்டத்தில் வேலூர் மாநகராட்சி தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. இத்திட்டத்தைச் செயல்படுத்த மாநில அரசிடமிருந்து ஒப்புதல் பெறப்பட்டதும் பணிகள் தொடங்கப்படும் என்றார் அவர்.
பொலிவுறு நகரங்கள் மிஷன் திட்டத்தில் பல்வேறு பணிகளை நிறைவேற்றுவதன் மூலம் வேலூரின் பாரம்பரியத்தை மீட்டெடுப்பதோடு, சுற்றுலாப் பயணிகளின் வரத்து அதிகரித்து அதன் மூலம் மாவட்ட மக்களின் வாழ்க்கைத் தரமும் உயரும் என்பதில் சந்தேகமில்லை.