அரக்கோணம் அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் பரிந்துரைத்து அனுப்பும் மாணவ, மாணவிகளுக்கு ரத்தப் பரிசோதனை செய்ய ஆய்வக பணியாளர்கள் மறுக்கின்றனர் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தமிழகம் முழுவதும் தற்போது ஆங்காங்கே டெங்கு காய்ச்சல், மர்ம காய்ச்சல் பரவி உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றன. அரசும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து, காய்ச்சல் பாதிப்புடன் மருத்துவ
மனைக்கு வருபவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்குமாறு அறிவுறுத்தியுள்ளது.
இந்நிலையில் அரக்கோணம் நகரில் பலர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, அரசு மருத்துவமனைக்கு வருகின்றனர். குறிப்பாக வயதானவர்களும், மாணவ-மாணவிகளும் அதிக அளவில் வருகின்றனர். இவர்களை பரிசோதிக்கும் பணி நேர அரசு மருத்துவர், ரத்தப் பரிசோதனை செய்துவருமாறு, பரிந்துரைக்கிறார்.
மருத்துவமனை வளாகத்தில் ரத்தப் பரிசோதனை ஆய்வகத்துக்கு சென்று பரிசோதனைக்காக ரத்தம் கொடுக்குமாறு அறிவுறுத்தி, அதனை சீட்டிலும் எழுதி தருகின்றனர்.
ஆனால், பரிசோதனை ஆய்வகத்தில் உள்ள பெண் பணியாளர் மாணவ, மாணவிகளுக்கு ரத்தப் பரிசோதனை செய்ய முடியாது என மறுப்பு தெரிவிக்கிறாராம். இதுகுறித்து, கேட்டபோது, ஒரு மாணவருக்கு ரத்தப் பரிசோதனை செய்தால், நிறைய மாணவ, மாணவிகள் ரத்தப் பரிசோதனைக்கு வந்து விடுவார்கள் எனவும், ஆகவே எதிரில் உள்ள தனியார் ஆய்வகங்களுக்கு சென்று பரிசோதனை செய்து கொள்ளுமாறும் தெரிவிக்கிறாராம்.
தனியார் ஆய்வகங்களில் பரிசோதனை செய்ய போதிய நிதி வசதி இல்லை என தெரிவித்தாலும், மாணவர்களுக்கு கண்டிப்பாக ரத்தப் பரிசோதனை செய்ய இயலாது என தெரிவித்து விடுகிறாராம்.
இதனால், காய்ச்சல் பாதிப்புக்குள்ளான பள்ளிக் குழந்தைகளை அழைத்து வரும் ஏழை பெற்றோர், பணம் இல்லாததால் ரத்தப் பரிசோதனை எடுக்காமலேயே வீடு திரும்புகின்றனர். இதனால், அவர்களுக்கு காய்ச்சல் அதிகமாகி உயிருக்கு பாதிப்பும், அருகில் வசிப்போருக்கு நோய் பரவும் அபாயமும் உள்ளது.
எனவே, அரக்கோணம் அரசு மருத்துவமனை ஆய்வகத்தில், மருத்துவரால் பரிசோதித்து அனுப்பப்படும் அனைவருக்கும் ரத்த பரிசோதனை செய்வதற்கு மாவட்ட சுகாதாரத்துறை உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.