மாணவிகள் பெறும் கல்வியானது நாட்டுக்கும், வீட்டுக்கும் பயன்படும் வகையில் இருக்க வேண்டும் என வேலூர் சரக டிஐஜி வி.வனிதா பேசினார்.
காட்பாடி ஆக்ஸிலியம் மகளிர் கல்லூரியின் 61-ஆவது விளையாட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது. போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி சரக டிஐஜி வி.வனிதா பேசியதாவது:
பெண்கள் பிறப்பதற்குக் கூட உரிமை இல்லாத நிலை இன்னும் உள்ளது. மேலும் சமுதாயத்தில் பெண்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாக்கப்படும் நிலைமை இருப்பது வேதனைக்குரியது. மானிடப் பிறவி சாதாரணமானது அல்ல. ஒவ்வொருவரையும் மனிதனாக மாற்றும் இடமாக கல்லூரிகள் திகழ்கின்றன. இங்கு பாடத்துடன், வாழ்க்கைக் கல்வியை ஆசிரியர்களால் கற்றுத் தரப்படுகிறது.
கல்விச் செல்வத்தை மட்டுமே யாராலும் திருடிச் செல்ல முடியாது. ஒழுக்க நெறியுடன் நடந்து கொள்ள வேண்டும். திருமணம் என்பது வாழ்க்கையின் இறுதி இலக்கு அல்ல. படித்த கல்வி நாட்டுக்கும், வீட்டுக்கும் பயன்படுவதாக இருக்க வேண்டும் என்றார்.
விழாவுக்கு, கல்லூரி முதல்வர் மேரி ஜோஸ்பின் ராணி தலைமை வகித்தார். கல்லூரிச் செயலர் அமலோற்பவம், துணை முதல்வர் ஷீலா சூசைராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணை முதல்வர் ஜெயசாந்தி வரவேற்றார். உடற்கல்வி இயக்குநர் மேரி ரீட்டம்மாள் ஆண்டறிக்கை சமர்ப்பித்தார்.
இதில், அகில உலக இளையோர் தினத்தை முன்னிட்டு மாணவியர் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். கல்லூரிப் பேராசிரியைகள், மாணவிகள் திரளானோர் கலந்து கொண்டனர்.