காட்பாடி ரயில் நிலையத்துக்கு சனிக்கிழமை வரப் பெற்ற 2,650 டன் பொட்டாஷ் உரம் பல்வேறு மாவட்டங்களுக்கு பிரித்து அனுப்பும் பணி நடந்து வருகிறது.
வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருவதால் மானாவாரி பயிர் சாகுபடியில் விவசாயிகள் தீவிரம் காட்டத் தொடங்கியுள்ளனர். பயிர்களுக்கு அடியுரம் இடுவதற்கு தேவையான பொட்டாஷ் உரம் 2,650 டன் தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து ரயில் மூலம் காட்பாடி ரயில் நிலையத்துக்கு வந்தது.
இந்த உர மூட்டைகள் பல்வேறு மாவட்டங்களுக்கு லாரிகள் மூலம் பிரித்து அனுப்பும் பணியில் இந்தியன் பொட்டாஷியம் விற்பனை அதிகாரிகள் சந்திரன், கருப்பசாமி ஆகியோர் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து வேளாண் துறை அதிகாரிகள் கூறியது:
மானாவாரி பயிர்களுக்கு அடியுரமாக பயன்படுத்த 2,650 டன் பொட்டாஷ் உரம் வந்துள்ளது. வேலூர், சேலம், விழுப்புரம், திருவள்ளூர், காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி மாவட்டங்களுக்கு பிரித்து அனுப்பப்பட்டு வருகிறது. 50 கிலோ எடை கொண்ட மூட்டை ரூ. 580 விலையில் விவசாயிகளுக்கு விற்பனை செய்யப்படும். நிர்ணயிக்கப்பட்ட விலையைக் காட்டிலும் கூடுதல் விலைக்கு விற்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.