குடியாத்தம் அருகே ரயில்வே சுரங்கப் பாதையில் மழைநீர் தேங்கியதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாயினர்.
குடியாத்தம் பகுதியில் சனிக்கிழமை இரவு பலத்த மழை பெய்தது. இதனால் குடியாத்தத்தை அடுத்த மேல்ஆலத்தூரில் உள்ள ரயில்வே சுரங்கப் பாதையில் 4 அடி வரை மழைநீர் தேங்கியுள்ளது.
மழைநீர் தேங்கியதும் ரயில்வே துறையினர் மின்மோட்டார் மூலம், தேங்கியுள்ள மழைநீரை அகற்றி விடுவர்.
ஆனால் பலத்த மழை காரணமாக அப்பகுதியில் மின்தடை ஞாயிற்றுக்கிழமை மாலை வரை தொடர்ந்ததால், பாலத்தின் கீழே தேங்கியுள்ள மழைநீரை அகற்ற முடியவில்லை.
இதனால் இந்த பாலத்தின் வழியாக குடியாத்தம்- ஆலம்பட்டறை, குடியாத்தம்- மாதனூர் செல்லும் சிற்றுந்துகள் இயங்கவில்லை.
மேலும், கார், ஆட்டோ, இரு சக்கர வாகனங்களும் செல்ல முடியாததால் அப்பகுதி மக்கள் பெரும் அவதிக்குள்ளாயினர்.
மழைநீரை அகற்ற ஞாயிற்றுக்கிழமை மாலை தீயணைப்பு வாகனம் அங்கு வந்தது.