வாணியம்பாடி நியூடவுன் காந்தி நகர் நகராட்சி உயர்நிலைப் பள்ளி மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது.
இதையொட்டி சனிக்கிழமை பள்ளி வளாகத்தில் நடைபெற்ற விழாவுக்கு, திருப்பத்தூர் மாவட்டக் கல்வி அலுவலர் சாம்பசிவம் தலைமை
வகித்தார்.
முன்னாள் எம்எல்ஏ கோவி. சம்பத்குமார், நகர அதிமுக செயலாளர் சதாசிவம், அண்ணா தொழிற் சங்க மாநிலத் துணைத் தலைவர் கோவிந்தராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியர் (பொறுப்பு) அன்பரசு வரவேற்றார்.
இதில், சிறப்பு அழைப்பாளராக மாநில தொழிலாளர் நலத் துறை அமைச்சர் நீலோபர் கபீல் கலந்து கொண்டு குத்து விளக்கேற்றி விழாவைத் தொடங்கி வைத்து பேசினார்.
தொடர்ந்து மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
விழாவில், நகராட்சி ஆணையர் (பொறுப்பு) கோபு, நகரமைப்பு அலுவலர் சண்முகம், முன்னாள் நகர்மன்றத் தலைவர் விஜயகுமார், நகர்மன்ற உறுப்பினர் பிரகாசம், முன்னாள் ஒன்றியக் குழுத் துணைத் தலைவர் அண்ணாசாமி, பேரூராட்சித் தலைவர் பாண்டியன், ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.
பள்ளியின் பெற்றோர்-ஆசிரியர் கழகத் தலைவர் தேவராஜ் நன்றி கூறினார்.