கம்பராமாயணம் மூலம் இலக்கணம், இலக்கியம், வாழ்வியல் நெறிமுறைகளை உலகிற்கு தந்தவர் கம்பர் என தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் விசயராகவன் பேசினார்.
திருப்பத்தூரில் 39-ஆம் ஆண்டு கம்பன் விழா சனிக்கிழமை தொடங்கியது. மாலை 3.45 மணிக்கு திருவையாறு இசைக் கல்லூரியின் மங்கல இசை நடைபெற்றது.
விழாவுக்கு, கம்பன் கழகத் தலைவர் எஸ்.எஸ்.மணியன் தலைமை வகித்தார். அமைப்பாளர் கே.எம்.சுப்பிரமணி வரவேற்றார். அதியமான் கல்லூரி நிறுவனங்களின் தாளாளர் சீனி.திருமால் முருகன் வாழ்த்துரை வழங்கினார்.
பாரத ஸ்டேட் வங்கியின் முதன்மை மேலாளர் எஸ்.செல்வராஜ் ஓவியக் கண்காட்சியைத் திறந்து வைத்தார். இதில், தமிழ் வளர்ச்சித் துறை மற்றும் உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவன இயக்குநர் கோ.விசயராகவன் கலந்து கொண்டு பேசியதாவது:
குழந்தைகளுக்கு கம்பராமாயணம் கற்றுத் தாருங்கள். அது அவர்களுக்கு வழிகாட்டியாக அமையும். கம்பனைப் போல தமிழை கையாள ஒருவர் பிறந்ததும் இல்லை, பிறக்கப்போவதும் இல்லை என அண்ணா கூறினார்.
மாணவர்கள் திருக்குறளையும், கம்பராமாயணத்தையும் ஒருவரி விடாமல் படித்தாலே சந்திப்பிழை எங்கு வருகின்றது என்று அறிய முடியும். கம்பராமாயணம் மூலம் இலக்கணம், இலக்கியம், வாழ்வியல் நெறிமுறைகளை உலகிற்கு தந்தவர் கம்பர்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தமிழறிஞர்களை போற்றும் வகையில் கம்பர் விருது, சொல்லின் செல்வர் விருதுகளை வழங்கியுள்ளார் என்றார்.
இதைத் தொடர்ந்து, பேராசிரியர் உமா தேவராஜனை நடுவராகக் கொண்டு வழக்காடு மன்றம் நடைபெற்றது.
கம்பன் கண்ட சீதை உந்தன் தாய் அல்லவா? என்ற தலைப்பில் பட்டிமன்றப் பேச்சாளர் பாரதி பாஸ்கர் சிறப்புரையாற்றினார்.