அரக்கோணம் ஐஎன்எஸ் ராஜாளியில் கடற்படை விமானதள வீரர்கள் பங்கேற்ற மாரத்தான் ஓட்டப் பந்தயம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
போட்டியை, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கடற்படை பொறுப்பு அலுவலர் ரியர் அட்மிரல் அலோக் பட்நாகர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இப்போட்டியில் கிழக்கு, மேற்கு, தெற்கு கடற்படை பிராந்தியங்களில் இருந்து 27 வீரர்கள் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில், ரியர் அட்மிரல் அலோக் பட்நாகர் பேசுகையில், கடற்படை வீரர்களிடையே ஆரோக்கியத்தை ஊக்குவித்தல், குழு உணர்வை ஊக்குவித்தல், நீண்ட தூர தடகள வீரர்களாக கடற்படையினரை உருவாக்குதல் போன்ற நிகழ்வுகள் இந்த மாரத்தான் ஓட்டப் பந்தயம் மூலம் நிறைவேறுவதாகத் தெரிவித்தார்.
போட்டியில், கிழக்கு பிராந்திய கடற்படையைச் சேர்ந்த ஜே.யாதவ் 34 நிமிடங்கள், 20 நொடிகளில் கடந்து முதல் பரிசு பெற்றார். தெற்கு கடலோர படைப் பிரிவைச் சேர்ந்த வினய்குமார் 34 நிமிடங்கள் 24 விநாடிகளில் கடந்து இரண்டாம் இடத்தைப் பிடித்தார்.
போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள் இந்திய அளவில் கடற்படை, விமானப் படை, ராணுவம் கலந்து முப்படை போட்டிகளில் பங்கேற்பர். இதைத் தொடர்ந்து, வெற்றி பெற்ற வீரர்களுக்கு ரியர் அட்மிரல் அலோக் பட்நாகர் பரிசுகளை வழங்கினார்.