கோவை பி.எஸ்.ஜி. செவிலியர் கல்லூரியில் நடைபெற்ற செவிலியருக்கான விநாடி - வினா போட்டியில் வேலூர் சி.எம்.சி. கல்லூரி அணி முதலிடம் பிடித்தது.
பி.எஸ்.ஜி. செவிலியர் கல்லூரி சார்பில் ஆண்டுதோறும் "ஜெனித்' என்ற பெயரில் விநாடி - வினா போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. 19-ஆவது ஜெனித் விநாடி - வினா போட்டி புதன்கிழமை நடைபெற்றது. 19 செவிலியர் கல்லூரிகளைச் சேர்ந்த 33 அணிகள் பங்கேற்ற இந்தப் போட்டியில், 5 அணிகள் இறுதிக்கட்ட போட்டிக்குத் தகுதி பெற்றன.
இந்த ஆண்டு போட்டியில், சமூகநல செவிலியர் துறை, மகப்பேறு செவிலியர் துறை, பொது அறிவு ஆகிய பாடங்கள் இடம் பெற்றிருந்தன. இறுதிச் சுற்றில் சி.எம்.சி. செவிலியர் கல்லூரி அணி வெற்றி பெற்று கோப்பையைக் கைப்பற்றியது.
முன்னதாக, போட்டிகளை பி.எஸ்.ஜி. செவிலியர் கல்லூரியின் முதல்வர் அ.ஜெயசுதா தொடங்கி வைத்தார். கங்கா கல்லூரியின் முதல்வர் எஸ்தர் ஜான் தலைமை தாங்கினார். பி.எஸ்.ஜி. மருத்துவமனையின் மகப்பேறு மருத்துவத் துறை பேராசிரியர் சீதா சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார். பேராசிரியர் ஸ்ரீ ரஞ்சனி, இணைப் பேராசிரியர் கா.ஜெயந்தி ஆகியோர் போட்டிகளை ஒருங்கிணைத்தனர்.