ராணிப்பேட்டையில் நூற்றாண்டு பழைமைவாய்ந்த ஆங்கிலேயேர் காலத்து ரயில்வே மேம்பால விரிவாக்கப் பணிகளுக்கான ஆரம்ப கட்ட ஆய்வினை நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் வியாழக்கிழமை தொடங்கினர்.
மகாராஷ்டிர மாநிலம், மும்பை நகரையும், தமிழகத்தின் சென்னை நகரையும் இணைக்கும் 1,235 கி.மீ. நீளம் கொண்ட தேசிய நெடுஞ்சாலை (என்.எச்.4 ) தமிழகம், ஆந்திரம், கர்நாடகம், மகாராஷ்டிரம் என நான்கு மாநிலங்கள் வழியாகச் செல்லும் முக்கிய தேசிய நெடுஞ்சாலையாக விளங்குகிறது.
இந்நிலையில், வாலாஜாபேட்டை, ராணிப்பேட்டை, சிப்காட், திருவலம், சேர்க்காடு வரையில் உள்ள பகுதிகளில் இட நெருக்கடி காரணமாக இரண்டு வழிப் பாதையாகவே உள்ளது. மேலும் மேற்கண்ட பகுதிகளில் தேசிய நெடுஞ்சாலையை ஆக்கிரமித்து கட்டடங்கள், வணிக வளாகங்கள், குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன.
இதனால் சாலையின் அகலம் குறைந்து, போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் சிரத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே ஆக்கிரமிப்புகளை அகற்றி நான்கு வழிச் சாலையாக மாற்ற வேண்டும் என நீண்ட நாள்களாக கோரிக்கை இருந்து வந்தது.
அதன் பேரில், சென்னையில் இருந்து சேர்க்காடு வரையிலான 123 கி.மீ. தொலைவு வரையில் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிக்காக ஆக்கிரமிப்புகளை அடையாளம் கண்டு அளவிடுதல் மற்றும் நான்கு வழிப்பாதையாக மாற்றும் பணிகளை மத்திய, மாநில நெடுஞ்சாலைத் துறையினர் கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கினர்.இதைத் தொடர்ந்து, வாலாஜாபேட்டை, வி.சி.மோட்டூர், ஆட்டோ நகர், முத்துகடை ஆகிய பகுதிகளில் சாலை விரிவாக்கப் பணிகளுக்காக அங்குள்ள சிறுபாலங்கள் அகற்றப்பட்டு புதிய பாலங்கள் கட்டும் பணிகள் நடைபெற்று
வருகின்றன.
இந்நிலையில், மேற்கண்ட சென்னை - மும்பை தேசிய நெடுஞ்சாலையின் மீது அமைந்துள்ள முக்கிய தொழில் நகரமான ராணிப்பேட்டை நவல்பூர் பேருந்து நிலையத்துக்கும் - காரை கூட்டுச் சாலைக்கும் இடையில் நூற்றாண்டு பழைமைவாய்ந்த ஆங்கிலேயேர் காலத்து குறுகிய ரயில்வே மேம்பாலம் உள்ளது.
இந்த குறுகிய மேம்பாலத்தின் வழியாக நாள்தோறும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் சென்றுவரும் நிலையில், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. எனவே இந்த மேம்பாலத்தை அகற்றிவிட்டு, புதிய பாலம் கட்ட வேண்டும் என எம்எல்ஏ ஆர்.காந்தி மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.
அதன்பேரில், கடந்த மாதம் 2-ஆம் தேதி பொன்.ராதாகிருஷ்ணன் நேரில் ஆய்வு செய்து புதிய மேம்பாலம் கட்டப்படும் என உறுதியளித்தார்.
அதனைத் தொடர்ந்து, விரிவாக்கப் பணிகளுக்கான ஆரம்ப கட்ட ஆய்வினை நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் வியாழக்கிழமை தொடங்கினர். அப்போது மேம்பால கட்டுமானப் பணிகள் நிறைவடையும் வரை வாகனங்களை மாற்று வழியில் திருப்பி விடுவது குறித்தும் ஆய்வு செய்தனர்.
இந்த மேம்பால விரிவாக்கப் பணிகள் நிறைவடைந்து மக்கள் பயன்பாட்டுக்கு வந்தால் போக்குவரத்து நெரிசல் குறையும் என வாகன ஓட்டிகள் கூறுகின்றனர்.